Tuesday, May 31, 2011

நீங்க எந்த இசம்??

இன்னிக்கு வேலை கொஞ்சம் கம்மியா இருந்ததால, மதிய உணவுக்கு முன்னாடியே வலைத்தளங்களில் கட்டுரைகளை மேய ஆரம்பிச்சுட்டேன். "மச்சி, சாப்பிட போலாம் வாடா!"னு என் நண்பன் ஒருத்தன் கூப்பிட்டான். (காலைல 10.30 தான் நானும் அவனும் உள்ள வந்தோம் ; 11.30க்கு காபி; 12.45க்கு சோத்துக்கு மணி அடிச்சாச்சு.. ஹிஹிஹிஹி.. என்ன மாதிரியே அவனுக்கும் ஆணி புடுங்குற வேலை இன்னிக்கு அதிகம் இல்ல..!) வாசிப்பின் மும்முரத்தில், அழைப்பை மறந்து வாசித்துக்கொண்டிருந்தேன். "அப்படி என்ன கருமத்தடா படிச்சுகிட்டு இருக்க"னு கடுப்புல என் இடத்துக்கு வந்து கணினியை நோட்டம் விட்டான். தொழிலாளர் போராட்டம் தொடர்பா ஓர் கட்டுரை வாசித்துக்கொண்டிருந்தேன். "டே, நீ என்ன புரட்சியாலன்னு மனசில நினைப்பா? எப்ப பாத்தாலும் இதுமாதிரி எதாவது ஒன்ன படிச்சிட்டு இருக்க? நீ இது மாதிரி படிக்கறதாலையோ, எழுதுரதாலையோ, தெருவுல கத்தி போராடுரதாலையோ, இங்க எதுவும் மாற போறது இல்ல.. எங்கயோ நடக்குற சண்டைக்கு இங்க தெருவுல உட்கார்ந்து தொண்டை கிழிய கத்துரனால ஒன்னும் புடுங்க முடியாது..(இலங்கை போர் நிறுத்தம் வேண்டி 'மென்பொருள் துறை சார்பாக' ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டதில நான் கலந்துகிட்டது!)... எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு பாக்டரில போனஸ் கேட்டு கொடிய புடிச்சுகிட்டு 'சாகும் வரை உண்ணாவிரதம்!' இருக்க வேண்டியது! அப்புறம் காசு வாங்கிட்டு கலஞ்சு போக வேண்டியது! இந்த IT யாவது நல்லா இருக்க விடுங்கடா.. இங்கயும் போராட்டம் உண்ணா விரதம், இட ஒதுக்கீடுனு கொண்டு வந்திராதீங்க!!"னு நக்கலாக பேசிக்கொண்டே போனான்..

அவன் பேச பேச எனக்கு தலை சுற்றியது..! "இவன் தெரிஞ்சுதான் பேசுறானா.. இல்லை தெரியாம பேசுறானா??"னு ஒரே குழப்பம் வேறு. ஒரு கட்டத்தில் வாக்கு வாதமாய் மாறிப்போனது.. இதை கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்கும் "அவர் சொல்வது நியாயம் தானே!" என்கிற எண்ணம் வராலம். இதை கொஞ்சம் விரிவாகவே புரிந்து கொள்ள, உங்களது ஆழந்த கவனிப்பு தேவையாகிறது..

ஒரு நாளைக்கு 16லிருந்து 18 மணி நேர வேலை, மிக மிகக் குறைந்த ஊதியம், பல இடங்களில் வேலைக்கு உணவு மட்டுமே( ஒரு குடும்பத்தில் அனைவரும் சாப்பிட வேண்டுமானால், எல்லோரும் அங்கே வேலை செய்தாக வேண்டும். கல்வி என்பதே கனவு தான்), எப்பொழுது வேண்டுமானாலும் வேலை போகலாம், விடுமறை கிடையாது’, என்பதான அடிமைத்தன நிலையை மாற்றி, 'குறைந்த பட்ச ஊதியம், ஊதிய உயர்வு, ஆயுள் காப்புரிமை, போனஸ், பணி நிரந்தர உறுதி' - என மிக அடிப்படையான தேவைகளை பெற்றுத்தந்தது, இப்படியான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த குரல்களும் அந்த பின்னால் இருக்கின்ற தொழிற்சங்கங்களும் தான்! நாம் இன்றைக்கு என்னதான் மிக அதிகமான ஊதியத்தில் சொகுசாக வேலை செய்து கொண்டிருந்தாலும், இந்த வசதிக்கு பின்னால் வார்ப்படமாய் மறைந்து போன ஒரு தொழிலாளியின் கூக்குரல் உள்ளது என்பதை மறந்து போக கூடாது..!! இன்றைய இளைய சமூகம் இதை மறந்து போனதும் வருத்தத்திற்குரிய விசயமே.. அடுத்தடுத்த தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துச்செல்ல முயலாதது மிக பெரிய குற்றம். எனக்கான கோபமும் அதுவே..!

மே 1 என்றால் விடுமுறை, அன்றைய தினம் உழைப்பாளர் சிலைக்கு மரியாதையை. எல்லா 'இச'த்தலைவர்களுக்கும் மாலை. அதோடு முடிந்து போனது மே தின கொண்டாட்டம்.(இதுகிடைல, டிவில ஒரு 'மே தின சிறப்புப் படம்!' அதுல ஹீரோவும் ஹீரோயினும் நேருக்கு நேர் மோதிக்குவாங்க.. அப்புறமா லவ் பண்ண தொடங்கிருவாங்க! கருமம் கருமம்!!)

யூனியன், சுத்தியல் அருவாள்போட்ட சிகப்புக் கொடி, உண்டியல், தேர்தலுக்கும் காசுக்கும் கால ஓட்டத்தில் நீர்த்துப் போன தொழிற்சங்க அமைப்புகள்- இதையெல்லாம் தாண்டி 19 நூற்றாண்டில் மத்தியில் தொடங்குகின்ற தொழிலாளர் போரட்டத்தை இணையத்தில் படித்துப்பாருங்கள் ! புரியும்.. அவ்வளவையும் விளக்க இந்தப் பதிவு போதாது!! எட்டுமணி நேரப்பணி, கட்டாய வார/வருட விடுமுறை, ESI, PF, Life Insurance, Medical Insurance, Canteen Food (sometimes Sudoxo food pass to get tax exception), Casual Leave, Maternity Leave, Paternity Leave, Bonus etc., - எங்கிருந்து வந்தது இவ்வளவும்??!! இன்றைக்கு வசதியாய் அனுபவித்துக்கொண்டிருக்கிற பல சலுகைகளை உரிமைகளாக்கிக் கொடுத்துப்போனது, உலகெங்கும் இதற்காகக் காலங்காலமாய் போராடி மடிந்துபோன தொழிலாளர்கள் அல்லவா?? அகிம்சையை போதிக்கிற கல்விமுறை இதை ஏன் கற்பிக்கவில்லை?? எல்லா இசங்களும் சாக்கடையில் கலந்துபோனதால் என்னவோ, கடைசி வரை கூக்குரல் இட்டவனை மறந்துபோனோம்!!

கல்விக் கண் திறந்த காமராஜர், குலக்கல்வியை எதிர்த்து, பகுத்தறிவு போதித்து, சாதியம் துடைக்க போராடின பெரியாரின் வரலாறுகளை இன்றைய குழந்தைகளுக்கு முறையாகச் சொல்லி இருக்கிறோமா?? பெரியரா - நீ திக! சாமிய கும்பிடாதவன்!; காமராஜரா - அது காங்கிரசு! (விருதுநகர் பக்கம் போன அவர நாடாரா மாத்திருவாங்க! எனக்கு தெரிஞ்சு மார்க் வாங்க மட்டுமே ஒரு சில கட்டுரைக்குள்ள அவங்கள அடக்கீறாங்க!)
என்னைப் பொறுத்த வரையில் வரலாறை மறந்து போன சமூகம் சாக்கடைக்குச் சமானம்! வேர்களை மறந்து, மரங்கள் வளர்வதில்லை!!

"தப்பை தட்டி கேட்குறதையும், உண்மைக்கு தோல்குடுக்குறதையும், கடந்து வந்த பாதைய வரலாறா வார்ப்பெடுக்கறதும் நாம அடுத்த தலைமுறைக்கு விட்டுப்போகிற உண்மையான சொத்தல்லவா??" என்ன சார் நான் சொல்றது??

'தம்பி' படத்துல கதாநாயகன் தான் மேல குற்றம் சொன்ன ஒரு மாணவன பார்த்து ஒரு கேள்வி கேட்பாரு !
ஹீரோ:-"ரோட்டல ஒருத்தன் அடிபட்டு சாக கிடக்குறான்..! அப்போ நீ என்ன பண்ணுவ??"
மாணவன்:- "ஓடி பொய் காப்பத்துவேன்.. ஹாஸ்பிட்டல்கு தூக்கிட்டு ஓடுவேன்! ஏன் கேட்குறீங்க??"
ஹீரோ:- "அப்போ நீ கம்யூனிஸ்ட்டா??!!"

Friday, May 27, 2011

குற்றத்தில் அணுவாகிறோம் !!

இரண்டாம் பதிவா எதப்பத்தி எழுதனும்னு ரொம்ப நாலா யோசிச்சு யோசிச்சே காலம் கடந்து போச்சுது.. சமீப காலங்களில் என்ன எழுதணும்னு தூண்டிய விஷயங்கள் தமிழக தேர்தல், ஊடகங்களால் மறக்கப்பட்ட ஜார்கந்த் பாக்சிட் கனிம சுரண்டலுக்கு எதிரான மலைவாழ் மக்களின் போராட்டம், அப்புறம் ஜப்பான் அணு உலை வெடிப்பு- அதை தொடர்ந்து இங்கே எழுந்த "அணு உலைகள் பாதுகாப்பானவை  தானா?" என்பதான விவாதங்கள்... பிபாசாபாசு வரி ஏய்ப்பு செய்ததயும், ரஜினிகாந்த் திட உணவு சாப்பிட்டதையும், கவுதம் கம்பீர் காயம் குறித்தும், பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகளில் நான் மேல சொன்ன விசயங்களுக்கு, ஒரு 'கண்ணீர் அஞ்சலி' பெட்டி செய்தி அளவுக்குக் கூட பத்தி ஒதுக்கல.. இன்றைக்கு உங்களுக்கு என்ன புடிக்கணும்னு நேற்று இரவு 12 மணிக்கு ஊடகங்கள் முடிவு செஞ்சாச்சு...! இந்த நாள் இனிய நாள் தான்.. !!!
இவ்விதமான விவாதங்களுக்குள்ள அணு உலைகள் பத்தின, எனக்கு தெரிஞ்ச விசயங்களை உங்கள்ட பகிர்ந்துக்கணும்னு தோணுது,.. கொஞ்சம் அவசிமானதாகவும்  நினைக்குறேன் ! இதுக்காக இணையங்களில், புத்தகங்களில் கொஞ்சம் தேடினேன்.. முதலிலேயே எனக்கு கரண்ட் அடிச்சமாதிரி ஒரு செய்தி,' இந்த 21 நூற்றாண்டில் கூட அணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், பாதுகாப்பாக  அழிப்பதற்கும் 'முறையான' தொழில்நுட்பம் யாரிடமும் இல்லை!' என்ற செய்திதான்.. வெட்டியெடுக்கப்பட்ட யுரேனியத் தாதுவ ஒரு குறிப்பிட்ட அளவு செறிவு ஊட்டப்பட்டு, பின் அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது! ( தயாரிப்பு முறைஎல்லாத்தையும் விளக்க இடம் இல்ல..! அப்பாடி தப்பிச்சுட்டேன்! :)) இந்த பிட்டுல ஒரு கொசுறு செய்தி-  யுரேனியும் செரிவூட்டுதலில்  வருகின்ற கழிவை (Depleted Uranium) 'Depleted Uranium Bombs', அதாவது குட்டிக் குட்டி அணுகுண்டுகளாக தயாரிக்கிறார்கள்! இவ்வகையான குண்டுகள் தான் இராக் போரிலும், இலங்கை போரிலும் பயன்படுத்தப்பட்டன..
சரி இப்போ ஆட்டத்துக்கு வருவோம்.. கதிர்வீச்சு என்பது எப்போதுமே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிற பண்பு.. அதாவது ஒரு முறை வெட்டி எடுக்கப்பட்டால், பின்பு தன் வேலையை தொடங்கி விடும்.. 30km - 40km  அதன் கதிர்வீச்சு இருக்கும்.. ஒரு சின்ன உதாரணம் சொல்றேனே..  26 April 1986 - Chernobyl என்ற இடத்துல நடந்த அணுவிபத்தால தோரயமா, ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் 20000 வருடங்களுக்கு 'மனிதன் வாழவே தகுதியற்ற இடமாக'  மாறி இருக்கிறது.. அணுக்கசிவுகளால் என்னன்ன விளைவுகள் இருக்கும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.. (சில பாதிக்கப்பட்ட படங்களைக்கூட பதிவேற்றம் செய்யலாம்னு பார்த்தேன்.. அப்புறம் வேண்டாம்னு விட்டாச்சு.. கஷ்டமா இருக்கு அவங்கள பார்த்தா...!!) 2010 வரைக்கும் இந்தியாவில் அணுஉலைகளின் எண்ணிக்கை 6 மட்டும் தான். ஆனால் INDO-US ஒப்பந்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை 13. எல்லாமுமே 8000MW- 10000MW அளவுக்கு மின்சாரம் தயாரிக்கக்கூடியவை. 
இதுல மிகுந்த வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னன்னா, இந்த அணு உலைகள்  அனைத்துமே இரண்டாம் தர, மூன்றாம் தர தொழிநுட்பத்தில் உருவாகக்கூடியவை மட்டுமே!  மேலும், அணு விபத்துக்கு, உலைகள்  விற்ற எந்த நிறுவனத்தையும் குற்றம் சொல்ல கூடாது, முடியாது! இழப்பீட்டு தொகை கிடையாது! இந்திய சட்டத்தின் முன்போ, உலகின் எந்த சட்ட அமைப்பின் முன்பும் அந்நிறுவனத்தின் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது! மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்- இந்த சரங்கள் அனைத்தும் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டு ரகசியமாய் இணைக்கப்பட்டவை(Nuclear Civil Liabilities Bill).  அப்போ மக்கள்?? அட போங்க பாஸ், மக்களாவது மண்ணாவது!  வாழ்க ஜனநாயகம் !! :(
இந்த அளவுக்கு அணு ஒப்பந்தம் போட்டது வெறும் 10% மின்சார தேவைக் குறைவை பூர்த்தி செய்யத்தான்! (By 2006 1,60,000MW produced; projected by 2032 as 8,00,000MW). வெறும்10% தேவைக்கு ஈவு இரக்கமில்லாம தாந்தோநித்தனமா இந்த இந்திய அதிகாரிகள் முடிவெடுத்திருகாங்க ! உபயம் General Electricals, Westing House, Areva போன்ற முதலாளிகள் !  இதுல நம்ம அதிகாரிகளுக்கும் அரசாங்கத்த நடத்துற அரசியவாதிங்கள், முக்கிய எதிர்கட்சி தலைகள் போன்றவர்களுக்கு கிடைக்குற கமிசன் மட்டும் தோரயமா ஒரு லட்சம் கோடி !! (2Gல கழுத்துவரைக்கும் மச்சி! )

மாற்று எரிசக்தி(Non-Conventional Energy) மூலமா கண்டிப்பா நம்மால் 6,00,000MW அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். தற்போது இருக்க எரிசக்தி கொள்கைய (50 வருஷம் ஆச்சு!) மாற்றம் செய்வதின் மூலம் - எரிசக்திய 25% - 30% மிச்சப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா அணு உபயோகத்தை குறைக்க முடியும்னு நம்புறேன்..  நம்மக்கு அணு உலைகளை விக்குற அமெரிக்கா தான் கற்றலை மூலமா உலகத்துலேயே அதிக மின்சாரம் தயாரிக்கிறது! 

இப்படி புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி (Renewable Energy) துறைய இந்த முதலைங்க வளர விடுறதே இல்ல..  எனக்கு தெரிஞ்சு சூரிய சக்தி, காற்றலை துறையில் அதிகமான படிப்புகளையோ, பட்டதாரிகளையோ, முனைவர்களையோ உருவாக்க நம் இந்தியக் கல்வி முறை அதிக அக்கறை காட்டுறது இல்லை.. 'Scientist in Wind Energy' என்று நான் கேள்விப்பட்டதில்லை ! அவர்களுக்கு தெரியும், எங்க அடிச்சா அது மலடாவே இருக்கும்னு ! அவிங்க கடைய காலி பண்ண தேவை இல்ல பாருங்க !!

கொஞ்சூண்டு படிச்சிட்டு, ஓரளவு புத்தியோட (விடுங்க பாஸ் இதெல்லாம் சந்தேகபட்டுகிட்டு!) இந்த அளவுக்கு அளவீடுகளை என்னால புரிஞ்சுக முடியும்ன, காலம் காலமா இதுக்காகவே ஆணி புடுங்கிட்டு இருக்கவங்க இதெல்லாம் யோசிக்கமலா இருப்பாங்க?? ஹ்ம்ம்ம்.. எல்லாம் பணம் பண்ற வேலை பங்காளி..!!! ஓங்கி தட்டிக்கேட்காம, ஒதுங்கி போற மனோநிலையில் கடைசியா, வாழவே தகுதி இல்லாத உலகத்த அடுத்து வார தலைமுறைக்கு விட்டுப்போகின்ற குற்ற உணர்ச்சியோட நாம் மடிகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை.. !!


மனசோட சேர்ந்து காலும் வலிக்குது..  :(  வாங்க ஒரு டீ போடலாம்..!